புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திறன் வளர்ப்புப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.செந்தில்வேல்முருகன் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் போட்டி (தமிழ்-ஆங்கிலம்), அறிவியல் மாதிரி செயல் திட்ட போட்டி, விளையாட்டு ஆகிய போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 400 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் போட்டி (தமிழ்,ஆங்கிலம்)-களில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ. 3,000, ரூ.2, 000, ரூ.1,000 ரொக்கப் பரிசுகளும், அறிவியல் மாதிரி செயல் திட்ட போட்டி, விளையாட்டில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.5000,ரூ.3000, ரூ.2000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கல்லூரித் தலைவர் கவிஞர் கதிரேசன் தலைமை வகித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். அதில், தாளாளர் பி. கருப்பையா, முதல்வர் கலியபெருமாள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்லூரியின் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.