அறந்தாங்கியில் உணவுப் பாதுகாப்பு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு தலைமை வகித்து, உணவு வணிகர்களுக்கான உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
வரும் 15-ஆம் தேதிக்குள் உணவு பதிவு உரிமச் சான்றிதழ்களை அனைத்து வணிகர்களும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆண்டு விற்பனைக் கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் ரூ.100 மட்டும் செலுத்தி, பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
உரிமச் சான்றிதழ் பெற ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆண்டு விற்றுக் கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கு மேல் உள்ள வணிகர்கள் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.புகைபடம்-1, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சொத்துவரி ரசீது நகல் மற்றும் மின்கட்டண ரசீது நகல் ஆகியவற்றை இணைத்து வழங்கினால் உடனடியாக உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் உணவுப் பாதுகாப்பு த்துறையை பயன்படுத்தி யாரேனும் தவறான முறையில் ஏமாற்றி பணம் பெற முயற்சித்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எம்.சரவணக்குமார், ஆர்.ரமாராமநாதன், எஸ்.ஜேம்ஸ், கே.சிவக்குமார், சிவக்குமார், எம்.முதலியப்பன், ஆர்.ரெங்கசாமி, எஸ்.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.