முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் இருந்து பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டதை எதிர்த்து மறியல்

புதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து தளவாடப் பொருள்கள் முறைகேடாக எடுத்துச் செல்லப்படுவதை எதிர்த்து

Updated On : 9 ஜூலை, 2018 at 8:47 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

புதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து தளவாடப் பொருள்கள் முறைகேடாக எடுத்துச் செல்லப்படுவதை எதிர்த்து கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஓட்டுக் கட்டடம் பழுதடைந்ததால், அந்த கட்டடத்தை இடிக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான செல்வம் கட்டடத்தில் உள்ள மரங்கள், ஓடுகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் லாரி மூலம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, பள்ளியில் இருந்து தளவாடப் பொருள்களை எடுத்துச் சென்ற செல்வத்தை கைது செய்ய வலியுறுத்தியும், எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை மீட்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வல்லத்திராகோட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.