புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சனிக்கிழமை வருகை தந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஸ்வரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும், வரலாற்று சிறப்பு மிக்க சித்தன்னவாசல் மற்றும் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள அஜந்தா ஓவியங்கள், சமணர் படுக்கை, ஏலடி பட்டம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை நீதிபதிகள் சுற்றிப் பார்த்தனர். பின்னர் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சென்று குடவரை கோயில், கன்னட இசைக் கல்வெட்டுகள், அகிலாண்டேஸ்வரி சன்னதி, பனிரெண்டு ராசி கல் தூண் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோயில் சார்பில் நீதிபதிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.
இதில், புதுக்கோட்டை நீதிபதிகள் தமிழ்செல்வி, நாகராஜன் மற்றும் இலுப்பூர் வட்டாட்சியர் சோனை கருப்பையா, அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேல், நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர்.