விராலிமலை அருகே மதுரை நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி உறையூரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கார்த்திகேயன்(31). வழக்குரைஞர். இவர் தனது காரில் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அந்த காரில் தனது வழக்குதாரர்களான உறையூரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பிரவீண் (21), ஹசரப் (23), பிரகாஷ்(22) ஆகியோரையும் அழைத்து சென்றார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகேயுள்ள வாடியான்குளம் அருகே சென்ற போது, காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையின் மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரவீண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த விராலிமலை போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக, வழக்குரைஞர் கார்த்திகேயன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.