மாணவர் மன்றங்கள் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளுக்கேற்ப பல்வேறு துறைகளில் சாதனை புரிய முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் வியாழக்கிழமை மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது.
மன்றத்தைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் பேசியது:
கல்வி ஒரு மனிதனை முன்னேற்றும். இன்றைய சூழ்நிலையில் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். கல்லூரி மாணவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர் மன்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் இந்த மன்றமும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வியுடன் தங்களது தனித் திறன்களை வளர்த்து கொள்வது மிக முக்கியமாகும்.
மாணவர் மன்றங்கள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் பட்டிமன்றக் குழு, மலையேறும் குழு, கலாசாரக் குழு, இலக்கியக் குழு போன்ற பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளுக்கேற்ப பல்வேறு துறைகளில் சாதனை புரிய முடியும்.
எனவே கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற மாணவர் மன்றங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் காலங்களில் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி உடல் நலன் பாதுகாக்க வேண்டும்.
இக்கல்லூரி மாணவ, மாணவிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுதி அரசுப் பணிகளுக்கு செல்லும் வகையில் கல்லூரி நூலகத்துக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ. 2.50 லட்சத்தில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆத்மா திட்டத்தின் கீழ் அடர்த் தீவன உற்பத்திமுறை ஆராய்ச்சிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.