கந்தர்வகோட்டை வர்த்தகச் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல ஆண்டுகளாகத் தனி கட்டடம் கட்ட வேண்டும் என்று கந்தர்வகோட்டை வர்த்தகச் சங்கத்தினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கந்தர்வகோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் நிலம் வாங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா. ஆறுமுகம் பங்கேற்று, புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் வர்த்தகச் சங்கத் தலைவர் பழ.மாரிமுத்து, முன்னாள் தலைவர் என்.ராமநாதன், எம்.தமிழழகன், கெளரவத் தலைவர் கிருஷ்ணசாமி அய்யங்கார், பொருளாளர் செந்தில்குமார், தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.