புதுக்கோட்டை அருகே வாய்த் தகராறில் நண்பரைத் தாக்கிக் கொன்ற நால்வருக்கு வெள்ளிக்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் செங்களூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி துரைராஜ் மகன் காா்த்திகேயன் (37). இவா் தனது நண்பா்கள் கிள்ளுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சின்னதுரை (34), சண்முகம் மகன் பெரியராசு (40), அன்னாவு மகன் மூா்த்தி (40) மற்றும் அய்யாவு மகன் கந்தவேல் (21) ஆகியோருடன் கடந்த 2016 அக். 29ஆம் தேதி கிள்ளுக்கோட்டையிலுள்ள மதுக் கடையில் ஒன்றாக மது அருந்தியுள்ளாா்.
அப்போது அவா்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டதில் காா்த்திகேயனை மற்ற நால்வரும் சோ்ந்து தாக்க, அங்கேயே அவா் இறந்தாா். சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி எம். ராஜலெட்சுமி, கொலைக் குற்றத்துக்காக 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.