புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளியில் முதல் நாள் ஏற்றப்பட்ட தேசியக்கொடி இறக்கப்படாமல் இரவிலும் பறந்த சம்பவம் தேசப்பற்றாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பனங்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மாலையில் இறக்கும் தொடர் நிகழ்வில், செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட தேசியக்கொடியை பள்ளி ஆசிரியர்கள் இறக்காமல் சென்றுவிட்டனராம்.
இதனால், தேசியக்கொடி இரவு முழுவதும் பறந்து கொண்டிருந்தது. புதன்கிழமை இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, தேசியக்கொடி இறக்கப்பட்டது. இதுபோன்ற, தேசியக்கொடி இரவிலும் பறந்த செய்தி தேசப்பற்றாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.