அறந்தாங்கி தொகுதி முழுவதும் ஒரே மாதிரியான பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி வரும் ஜன. 21-திங்கள்கிழமை நாகுடியில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க அறந்தாங்கி தாலுகா குழுவின் அவசரக்கூட்டம் புதன்கிழமை அறந்தாங்கியில் தாலுகா செயலர் வி. லெட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2016-2017-ம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன என அறிவிப்பு வெளியிடப்பட்டு 80 சதவீத பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் காப்பீட்டு நிறுவனம் 80 சதவீத தொகையை அதாவது ஏக்கருக்கு ரூ. 22 ஆயிரத்தை சில இடங்களில் மட்டுமே வழங்கியுள்ளது. பல இடங்களில் ரூ.5 ஆயிரத்தி 500 மட்டுமே வழங்கப்பட்டதாக புகார் வந்தது. இதுகுறித்து ஆவுடையார்கோவில் விவசாயிகள் வட்டாட்சியர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
ஆகவே அறந்தாங்கி தொகுதியை உள்ளடக்கிய அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி அனைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியாக ஏக்கருக்கு ரூ. 22 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நாகுடி கடைவீதியில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சாலை மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் அ. பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் தென்றல் கருப்பையா, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.