திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சு. சிவராசு தெரிவித்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு. சிவராசு கூறியது: திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் 41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் கூடுதல் காவலர்கள் நியமிக்கவும், கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தேர்தல் பணிகளுக்கு வாகன அனுமதி உள்ளிட்ட அனுமதிகளைப் பெறும் பணிகளை அரசியல் கட்சியினர் உதவித் தேர்தல்
நடத்தும் அலுவலர்களான புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியரையும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரையும் அணுகலாம் என்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் உள்ளிட்ட இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்களும் பங்கேற்றனர்.