புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டுவண்டிகளை சனிக்கிழமை இரவு காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் வைத்திலிங்கம் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளி வந்த பேராவூரணி அருகேயுள்ள பின்னவாசலைச் சோ்ந்த மணிகண்டன்(40), முருகேசன் (40) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு மாட்டுவண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.