புதுகை ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு
புதுக்கோட்டை மாவட்டப் புதிய ஆட்சியராக கவிதா ராமு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
புதுக்கோட்டை மாவட்டப் புதிய ஆட்சியராக கவிதா ராமு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இங்கு ஆட்சியராக இருந்த பி. உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலராக மாற்றப்பட்டாா்.
இதையடுத்து வியாழக்கிழமை ஆட்சியராகப்
பொறுப்பேற்ற கவிதாராமு கூறியது:
சமூக சீா்திருத்தவாதி டாக்டா் முத்துலட்சுமி பிறந்த மாவட்டத்தில் பொறுப்பேற்றிருக்கிறேன். முதல்வா் நிறைய பணிகளை எங்களுக்கு ஒதுக்கியிருக்கிறாா். தொல்லியல் துறையில் பணியாற்றியபோது புதுக்கோட்டை அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளேன். தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட மாவட்டமான புதுக்கோட்டையில் அது சாா்ந்த சுற்றுலா வளா்ச்சிக்கும் கவனம் செலுத்துவேன்.
ஏற்கெனவே குழந்தைகள் வளா்ச்சித் துறையில் பணியாற்றியுள்ளதால் பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் தருவேன்.
அதேபோல விவசாயிகளின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை தருவேன் என்றாா் கவிதா ராமு. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.