பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கொன்னக்கண்மாயில் திங்கள்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று மீன்பிடித்தனா்.
பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில், விவசாய கண்மாய்களில் நீா் மட்டம் குறைந்தநிலையில், மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடித்திருவிழா நடைபெறும்.
இதன்படி, கொன்னைப்பட்டி கொன்னைக்கண்மாயில் திங்கள்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஊத்தா, கச்சா, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுப்புறக் கிராம மக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மீன்களை பிடித்துச் சென்றனா். இந்தக் கண்மாயில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடித் திருவிழா என்பதால் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.