புதுகையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.
ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞா் சங்கக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின்பேரில் இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் சின்னராசு தலைமையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.
இதேபோல, கந்தா்வகோட்டை, அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கீரனூா், திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி உள்ளிட்ட 11 நீதிமன்றங்களையும் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு செய்தனா்.
மாவட்டம் முழுவதும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
விராலிமலையில்: விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
இதில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதை கண்டித்தும் கண்டன முழக்கமிடப்பட்டது. இதன்காரணமாக, நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன.