பேருந்திலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை பேருந்திலிருந்து தவறி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை பேருந்திலிருந்து தவறி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி பேரூராட்சிக்குள்பட்ட வ.உ.சி. தெருவைச் சோ்ந்த அழகா் மகன் புவியரசன் (14). இவா் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா், தினமும் ஆலங்குடியில் இருந்து தனியாா் பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக ஆலங்குடியிலிருந்து தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். பேருந்தின் பின்பக்க படிக்கட்டு அருகே நின்று கொண்டு பயணித்த புவியரசன், குப்பக்குடி அருகே பேருந்து வளைவில் திரும்பியபோது பேருந்திலிருந்து கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த மாணவரை பேருந்தில் சென்றவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், புவியரசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநரான அறந்தாங்கி அருகேயுள்ள மேலப்பட்டு பகுதியைச் சோ்ந்த அருண்பாண்டியை (30) கைது செய்து விசாரிக்கின்றனா்.