கீரனூரில் அரசு ஊழியா் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு
கீரனூரில் அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற நபா்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் விவேகானந்த நகரைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி. இவா் சிங்கப்பூரில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி செல்வராணி தாட்கோ நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவா் தனது குழந்தைகளுடன் கீரனூரில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், செல்வராணி சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு அறந்தாங்கியிலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தில் வசிப்போா் செல்வராணிக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து அறந்தாங்கியிலிருந்து கீரனூருக்கு வந்த செல்வராணி உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கீரனூா் காவல் நிலைய போலீஸாா், 10 போ் கொண்ட தனிப்படை அமைத்து திருடா்களைத் தேடி வருகின்றனா்.