கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி தஞ்சாவூர்
கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி தஞ்சாவூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டின் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய வேண்டும். மணலுக்கு மாற்றாக உள்ள எம். சான்ட் உற்பத்திக்கு மணல் தேவையை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் அனைத்துக் கட்டுமானப் பணிகளிலும் உள்ளூர் தொழிலாளருக்கு 80 சதவீத வேலைகளை ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். மணல் பிரச்னையால் வேலை இழந்த காலத்துக்கு மாதம் ரூ. 5,000 நல வாரியம் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். தில்லைவனம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டத் தலைவர் வெ. சேவையா, துணைச் செயலர் துரை. மதிவாணன், கட்டடப் பொறியாளர் சங்க அறக்கட்டளைத் தலைவர் ஜெ. ஜான் கென்னடி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.