சாரங்கபாணி கோயிலில் ராப்பத்து உற்ஸவம் தொடக்கம்
கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை ஒட்டி நடக்கும் ராப்பத்து உற்ஸவம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது.
கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை ஒட்டி நடக்கும் ராப்பத்து உற்ஸவம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது.
திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக 3-ஆவது பெரிய வைணவ தலமாக கும்பகோணம் சாரங்கபாணி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை 51 நாள்கள் ஆண்டு பெருவிழா நடக்கிறது.
அந்த வகையில், கடந்த 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 10 நாள்கள் டோலோத்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 10 நாள்கள் பகல் பத்து உற்ஸவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 26-ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை 12 நாள்கள் இராப்பத்து, இயற்பா, தேசிக பிரபந்த உற்சவங்களும் தொடங்கியது.
இந்நாள்களில் பெருமாள் பிரகார புறப்பாடு, நூற்றுக்கால் மண்டபத்தில் ஆழ்வார்கள் மரியாதை கண்டருளும் வைபவம், மண்டப ஆராதனம், பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளும் வைபவமும், நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி சேவையும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக வெள்ளிக்கிழமை (டிச.29) பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.