பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நலிந்தோருக்கு உடைகள், மரக்கன்றுகள், மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமாகாவின் பாபநாசம் நகர முன்னாள் பொறுப்பாளர் பி.ஷேக்அப்துல்லாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமாகாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் பங்கேற்றார்.
கட்சியின் பாபநாசம் வட்டார, நகர அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் எ.ஜிர்ஜிஸ் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பண்ண உடையார் (பாபநாசம்), எம். ராஜாங்கம் (திருவிடைமருதூர்),
பாபநாசம் வட்டார தலைவர்கள் எஸ்.சேதுராமன் (தெற்கு), எஸ்.டி.ஜெயகுமார் (வடக்கு) உள்ளிட்டோர் முன்னிலையில் கட்சி கொடியை ஜி.ஆர். மூப்பனார் ஏற்றி வைத்தார். பின்னர், நலிவடைந்தோருக்கு உடைகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஜி.ஆர். மூப்பனாருக்கு கட்சி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் எம்.ஆர்.எஸ்.சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் இ. சரவணன், நகர துணைத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, நகரத் தலைவர் தனபால் வரவேற்றார். நிறைவில் வட்டார பொது செயலாளர் எஸ்.பகுருதீன்அலிஅகம்மது நன்றி கூறினார்.