ஒரத்தநாடு அருகே கோயில் இடத்தை பராமரிப்பு செய்தபோது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஒரத்தநாடு வட்டம் , கருக்காகோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் இடத்தை கடந்த சனிக்கிழமை தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு , புல் , பூண்டு மண்டி கிடந்த இடத்தை டிராக்டர் கொண்டு உழுதனர்.
அப்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் அம்மன் கற்சிலை தென்பட்டுள்ளது. சிலையை வெளியே எடுத்த அப்பகுதி மக்கள், சிவன் கோயிலில் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஒரத்தநாடு வருவாய்த் துறையினர் ஒரத்தநாடு வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் திங்கள் கிழமை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து சிலையை பறிமுதல் செய்ய முயன்றனர்.
அப்போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சிலையை எடுக்காமல் திரும்பி சென்றனர்.