குடந்தையில் கட்சி நிர்வாகியை காரில் கடத்திய 7 பேர் கைது
கும்பகோணத்தில் முன்விரோதம் காரணமாக கட்சி நிர்வாகியை காரில் கடத்தி, தாக்கிய 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணத்தில் முன்விரோதம் காரணமாக கட்சி நிர்வாகியை காரில் கடத்தி, தாக்கிய 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணத்தை அடுத்த முருக்கங்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (25). தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் ஒன்றிய துணை செயலாளராக உள்ளார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பப்பு (எ) பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது. இதில் பிரகாஷ் தரப்பினர், மணிகண்டன் தரப்பைச் சேர்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டினர். இதனால் இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை பப்பு (எ) பிரகாஷ், இவரது நண்பர்களான அப்பு, ராகுல், ராஜ்குமார், அலெக்ஸ், அன்புரோஸ் ஆகிய 7 பேரும் காரில் செட்டிமண்டபம் அருகில் சென்ற போது, எதிரே மணிகண்டன் வந்துள்ளார்.
அவரைப் பார்த்ததும், ஆத்திரமடைந்த பிரகாஷ் தரப்பினர், மணிகண்டனை காரில் கடத்தி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுவரை அடித்து, உதைத்தபடி சென்றுவிட்டு, மீண்டும் ஏற்றிய இடத்திற்கே கொண்டு வந்தனர்.
அங்கு ஓடும் காரிலிருந்து அவரை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அப்பகுதியினர் மணிகண்டனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தாலூகா போலீஸார் வழக்குப் பதிந்து, கடத்தலில் ஈடுபட்ட 7 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதில் அலெக்ஸ் மற்றும் அன்புரோஸ் மீது கும்பகோணம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.