கும்பகோணத்தில் காஞ்சி ஜயேந்திரருக்கு மலரஞ்சலி
காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமி மறைவையொட்டி கும்பகோணத்தில் புதன்கிழமை அவரது திருவுருவப் படத்துக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமி மறைவையொட்டி கும்பகோணத்தில் புதன்கிழமை அவரது திருவுருவப் படத்துக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
காஞ்சி சங்கர மடத்துக்கு இணையாக கும்பகோணம் மடத்துத் தெருவில் சங்கர மடம் உள்ளது. இந்த மடத்தில் மூலவராக சந்திரமௌலீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். காஞ்சி ஜயேந்திரர் காலமானதை அடுத்து புதன்கிழமை சந்திரமௌலீஸ்வரர் சன்னதியின் நடை சாத்தப்பட்டது.
தொடர்ந்து, கும்பகோணம் காந்திபூங்கா அருகில் காஞ்சி ஜயேந்திரரின் உருவப் படத்துக்கு புதன்கிழமை மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது மறைவுக்கு மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அகில பாரத துறவியர் சங்க செயலாளர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமத் சுவாமி வேதாந்த ஆனந்தா, தலைவர் பி.கல்யாணசுந்தரம், செயலாளர்கள் சத்தியநாராயணன், வெங்கட்ராமன், துணைத் தலைவர் ரத்தினசாமி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
பின்னர் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்துக்கு சென்றனர்.
சங்கர மடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜயேந்திரர் படத்துக்கு மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தப்பட்டது.