தமிழகம், தமிழர் நலனுக்காக பாடுபடுபவர் மோடி; அவருக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கும்பகோணத்தில் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு முன்பாக, தமிழகத்தில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் தனியாகவோ, நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்தோ நடந்தால் நாங்கள் ரஜினிகாந்தை ஆதரிப்போம். அவரை தலைமையேற்க வைத்து ஆன்மிக அமைப்புகள் ஒன்று சேர்ந்து, இந்து மக்கள் கட்சி சார்பில் 20 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று ரஜினி கூறியுள்ளார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் பேசி வருகின்றனர். தமிழர்கள் என பேசி தமிழ் தேச அரசியல் செய்பவர்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதையும்தான் நோக்கமாக கொண்டுள்ளனர். எனவே, இத்தகைய அமைப்புகள், நிர்வாகிகள் பேச்சை நம்பி அவர்களது பின்னால் தமிழர்கள் செல்லக் கூடாது.
உண்மையிலேயே தமிழகம், தமிழர் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். விரைவில் பதவிக்காலம் நிறைவடைய உள்ள சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவி காலத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்றார் அர்ஜுன்சம்பத்.