தஞ்சாவூர் 34 வது தமிழ்நாடு தனிப்படை தேசிய மாணவர் படையின் ஆண்டு முகாம் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.
முகாமை கர்னல் சைகத்ராய் தொடங்கி வைத்து, முகாமில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள், ராணுவ பயிற்சியாளர்கள் பங்கேற்று பயிற்சியளித்து வருகின்றனர்.
வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முகாமில் டரில், வரைபடங்களை படித்தல், துப்பாக்கி சுடுதல், உடற்பயிற்சி, போர்பயிற்சி விளக்கம், பேரிடர் மேலாண்மை, போதை மறுவாழ்வு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, சுத்தம் மற்றும் உடல்நலம் பேணல் தொடர்பான பயிற்கள் அளிக்கப்பட உள்ளன. தொடர்ந்து, தேசிய மாணவர் படையின் ஏ, பி, சி தேர்விற்கான வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.
நல்ல குடிமக்களையும், தலைவர்களையும் உருவாக்குவதும், சுயக்கட்டுபாடும், நல்லொழுக்கமும் கொண்ட மாணவர்களை நமது நாட்டிற்கு உருவாக்கி கொடுப்பதுமே இந்த முகாமின் நோக்கம் என தேசிய மாணவர் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.