தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் இயக்குநராக மு. பாலசுப்ரமணியம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரள மாநிலம், பாலகாட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பாலக்காடு செம்பை இசைக் கல்லூரி மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எல்.வி. இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். மேலும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் புலத் தலைவராகவும், திருச்சூர் எஸ்.ஆர்.வி. அரசு இசைக் கல்லூரியில் சிறப்பு அலுவலராகவும் பணியாற்றினார். தற்போது, மத்திய கலாசார துறையின் ஆலோசகராக இருந்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்ற இசை விழாக்களில் பங்கேற்றுள்ளார். மேலும், செம்மங்குடி சீனிவாச ஐயர், பேராசிரியர் கே.வி. நாராயணசுவாமி, டி.கே. ஜெயராமன், மேண்டலின் யு. ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் கலைஞர் என். ரமணி உள்பட பல இசை மேதைகளுடன் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தது: இம்மையத்தில் வழக்கம்போல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், கலைஞர்களை ஊக்கப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இன்னும் பல கலை நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். இம்மையத்தில் இயக்குநர் பதவி சில மாதங்களாகக் காலியாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.