கும்பகோணம் ஸ்ரீராம் நகர் பகுதியில் அனுமதி இன்றி வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், கும்பகோணம் தாலுகா ஆய்வாளர் முருகவேல் தலைமையிலான போலீஸார் ஸ்ரீராம் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சிலர் அனுமதியின்றி வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மதுபானங்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த தலா 180 மி.லி. அளவு கொண்ட 2,352 மதுபாட்டில்கள் அடங்கிய 49 பெட்டிகள் மற்றும் 2 கேன்களில் அடைக்கப்பட்ட 110 லிட்டர் வெளி மாநில சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கிருந்த வட்டி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (63), இவரது மகன் வேல்முருகனை (33) போலீஸார் கைது செய்தனர். மேலும், 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.