நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நூறு நாள் வேலை திட்ட நாள்களை 200 நாள்களாக உயர்த்த வேண்டும். ஊதியத்தை ரூ. 400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பத் தலைவராக உள்ள குடும்பங்கள், பட்டியல், பழங்குடியினர், நிலமற்ற கிராமத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அந்தியோதயா அன்னயோஜனா வகைப்பட்ட குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மாநிலப் பொதுச் செயலர் பெரியசாமி, செயலர்கள் பாஸ்கர், சாத்தையா, துணைத் தலைவர்கள் பழனிசாமி, ராசு, பொருளாளர் சி. சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.