ஒரத்தநாடு அருகே அரசப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் பயணிக்க தற்காலிக மாற்றுப்பாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், நெய்வாசல் பஞ்சாயத்துக்குட்பட்ட அரசப்பட்டு கிராமத்தில் ஊசிக்கண் பாலம் உள்ளது. இந்தப் பாலம் வடவாற்றின் குறுக்கே உள்ளது. வடவாற்றின் ஒரு பகுதி மன்னார்குடி தாலுகா பேரையூர் வழியாகவும், மற்றொரு பகுதி வடுவூர் ஏரியிலும் சென்று கலக்கிறது. பல ஆண்டுக்கு முன் வடவாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரை மட்ட பழைய பாலத்தை உடைத்து விட்டு, நபார்டு மூலம் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாகவே சென்று வந்தனர். முக்கிய சந்திப்பான அம்மாபேட்டை, அருந்தவபுரம் செல்லவும் இந்தப் பாதையைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், தற்போது பாலம் உடைக்கப்பட்ட நிலையில், மாற்று வழி இல்லாததால் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர். மக்களின் கோரிக்கையும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலர் என். சுரேஷ்குமார் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், அரசப்பட்டு கிளைச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் அந்த இடத்தைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் என். சுரேஷ்குமார் கூறுகையில், "இந்த வழியாகச் செல்லும் நெய்வாசல், கீழத்தெரு, மேலத்தெரு, வடக்கு நத்தம், அரசப்பட்டு, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், மாற்றுப்பாலம் அமைக்கப்படாத நிலையில் வெகுதொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தற்காலிக மாற்றுப்பாலம் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.