பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை காவல் சரகம், பூண்டி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தில்லையம்மாள் (61). இவர் டிசம்பர் 25ஆம் தேதி பிற்பகல் வடவாற்றுக்கு குளிக்க சென்றபோது மாயமானார்.
புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப். 12) வடவாற்றில் சேகர் என்பவர் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம். மீன்வலை ஆற்றின் நடுத்திட்டில் வளர்ந்திருந்த நாணல் புதரில் சிக்கியதால் அங்கு சென்ற சேகர் வலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாராம். அப்போது, நாணலில் சிக்கி அழுகி எலும்புக் கூடான சடலம் கிடப்பதை பார்த்த சேகர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸுக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீஸார், எலும்புகூடான அந்த சடலத்தை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டது தில்லையம்மாளின் சடலம் என்பது தெரிய வந்தது.