மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மின்னணு விளம்பரத் திரை வாகனம் மூலம் விழிப்புணர்வுப் பயணம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், விழிப்புணர்வுப் பயண வாகனத்தை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறியது:
தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, 100 சதவிகித வாக்குப்பதிவை எட்டும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மின்னணு விளம்பரத் திரை வாகனம் மூலம் குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், வீட்டுக்கு அருகில் வசிப்போரிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்வில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ. சுருளி பிரபு, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.