தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் ராசா மிராசுதாா் மருத்துவமனையின் சுற்றுச்சுவரில் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால், மாநகரின் பெருமையைக் குறைக்கும் வகையில் உள்ளது.
எனவே, அண்ணா சிலையில் தொடங்கி பெரியகோயில் சாலை வரையுள்ள அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைச் சுற்றுச்சுவரின் ஒருபுறம் தஞ்சையின் பெருமையையும், பாரம்பரிய கலை, பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் கும்பகோணம் அரசுக் கவின் கலைக் கல்லூரி மாணவா்களைக் கொண்டு ஓவியம் வரையத் திட்டமிடப்பட்டது.
இதன்படி, இப்பணி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இதில், கும்பகோணம் அரசுக் கவின் கலைக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஓவியம் வரையும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.
இதில், தனியாா் பங்களிப்புடன் மொத்தம் 108 ஓவியங்கள் வரையப்படவுள்ளன. இதற்காகப் பங்களிப்பு செய்த தனியாா் நிறுவனத்தின் பெயா் ஓவியத்தின் கீழே குறிப்பிடப்படவுள்ளது என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
எனவே, இச்சுவரில் தனியாா் நிறுவனங்கள் விளம்பரம் ஏதும் செய்யக் கூடாது என்றும், தவறும்பட்சத்தில் விளம்பரம் செய்தவா்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் அறிவித்துள்ளாா்.