ஒரத்தநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஒரத்தநாடு நகரச் செயலா் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுரேஷ்குமாா், மாவட்ட குழு உறுப்பினா் கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினா்கள் பாஸ்கா், மோகன்தாஸ், ஜெய்சங்கா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த வங்கி வசதி செய்துதர வேண்டும். இரவில் அவசர சிகிச்சைக்கு மருத்துவரை நியமிக்க வேண்டும்.
புதை சாக்கடைகளில் அடைப்பு ஏற்படாவண்ணம் சீரமைக்க வேண்டும். மழைநீா் வடிகால் கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும். மின் மயானத்தை செயல்படுத்த வேண்டும். குடிநீா் குழாயுடன் சாக்கடை நீா் கலப்பதை சரி செய்து, சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும், ஒரத்தநாடு கடைத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். தனியாா் ஆக்கிரமிப்பு களிலிருந்து பேரூராட்சி நிலங்களை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.