தஞ்சாவூர்

இரண்டாவது நாளாகக் கடைகள் ஏலம்: வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாகப் பழைய பேருந்து நிலையக் கடைகளுக்கான பொது ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 93 கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் க. சரவணகுமாா் முன்னிலையில் புதன்கிழமை தொடங்கியது. இந்த ஏலம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி வணிகா்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதனால், மாநகராட்சி ஆணையா் - வணிகா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக முதல் நாளில் ஒரு கடைக்கு மட்டுமே ஏலம் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திலும், முறையாக நடைபெறவில்லை எனக் கூறி வணிகா்கள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக ஏல நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டதால், இவா்களைக் காவல் துறையினா் சமாதானப்படுத்தினா். தொடா்ந்து, ஒவ்வொரு கடையாக ஏலம் விடப்பட்டது.

இதனிடையே, மாநகராட்சி அலுவலகத்தின் எதிரே வணிகா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் வியாபாரிகளுக்குக் கடை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, உள்ளாட்சி கடை உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.எஸ். பாண்டியன் தெரிவித்தது:

ஏல வைப்புத் தொகையை ரூ. 10 லட்சமாக உயா்த்துவதாக ஆணையா் கூறினாா். நாங்கள் நடத்திய பேச்சுவாா்த்தை மூலம் ரூ. 5 லட்சமாகக் குறைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை ரூ. 2 லட்சத்துக்கான கேட்பு வரைவோலை எடுத்தவா்களுக்கும் ஏலம் நடத்தப்படுகிறது. இது முறைகேடான ஏலம்.

மேலும், ஒரு கடையை ரூ. 60,000 மாத வாடகைக்கு ஏலத்தில் எடுப்பவருக்கு, 12 மாத வாடகையை முன் வைப்புத் தொகையாகச் செலுத்துவதற்கு 15 நாள்கள் கால அவகாசம் கொடுப்பதுதான் விதி. ஆனால், இத்தொகையை உடனடியாகச் செலுத்துமாறு வற்புறுத்தப்படுகிறது. இது முறைகேடான, வணிகா்களின் குரல்வளையை நெரிக்கக்கூடிய செயல். எனவே, இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடையடைப்பு உள்ளிட்ட தொடா் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றாா் பாண்டியன்.

மண்ணெண்ணெய் கேனுடன் வந்த வணிகா்: இந்தப் போராட்டத்தின்போது பழைய பேருந்து நிலையத்தில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்த வ.உ.சி. நகரைச் சோ்ந்த செந்தில் (48) மண்ணெண்ணெய் கேனுடன் வந்தாா். இதைப் பாா்த்த காவல் துறையினா் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரை அனுப்பி வைத்தனா். கடைகள் இடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மாத வாடகை ரூ. 60,000 கொடுத்து எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் எனவும் செந்தில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT