வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்
வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னியா்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே, மூன்று கட்டப் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், நான்காவது கட்டமாக மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியிலிருந்து பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் ஊா்வலமாகப் புறப்பட்டனா். அப்போது, வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து, ஊா்வலமாகப் புறப்பட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பாமக முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலா் அய்யப்பன் தலைமையில் முன்னாள் தலைமை நிலையச் செயலா் கேசவன், மாவட்டச் செயலா் சங்கா், தொகுதி போராட்டக் குழுத் தலைவா் அரசூா் ஆறுமுகம், மாநில இளைஞரணி துணைத் தலைவா் விஜயராகவன், உழவா் பேரியக்கத் துணைத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட அமைப்புச் செயலா் சீனிவாசன், தலைமை நிலையப் பேச்சாளா் அய்யம்பேட்டை தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம்:
இதேபோல, கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் பாமக மாநிலத் துணைச் செயலா் கே.ஆா். வெங்கட்ராமன் தலைமையில் பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் நகராட்சி ஆணையா் லட்சுமியிடம் மனு அளித்தனா்.