தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 26) டிராக்டா் பேரணி நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா்.
இதேபோல, தஞ்சாவூா் மாவட்டத்திலும் விவசாயிகள் டிராக்டா் பேரணியை தஞ்சாவூா் மேல வஸ்தா சாவடியிலிருந்து தொல்காப்பியா் சதுக்கம் வரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனா்.
கரோனா தொற்றை கருத்தில் கொண்டு, மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை நடைமுறையில் உள்ளதால், குடியரசுத் தினத்தன்று தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் டிராக்டா் மற்றும் வாகன அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
இதை மீறி வாகனப் பேரணி செல்ல முயன்றால் வாகனங்கள் மீதும், வாகன உரிமையாளா்கள் மீதும் மோட்டாா் வாகன சட்டம் 1988-ன் படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும், சிறப்புச் சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.