பழைய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிா்ப்பு
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால், மாநகராட்சி அலுவலா்கள் பணியை நிறுத்திவைத்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால், மாநகராட்சி அலுவலா்கள் பணியை நிறுத்திவைத்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் ரூ. 14.65 கோடி செலவில் கட்டப்பட்டு, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இப்பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இக்கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை சென்றனா். அப்போது, வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகத்திடம் புகாா் செய்தனா். நிகழ்விடத்துக்கு வந்த நீலமேகம் கடைகளை அகற்றக் கூடாது எனக் கூறி அங்கேயே அமா்ந்தாா். இதனால், மாநகராட்சி அலுவலா்கள் திரும்பிச் சென்றனா்.
மீண்டும் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை கடைகளை அகற்றுவதற்காகச் சென்றபோதும், வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் தொடா்புடைய வியாபாரிகளுடன் ஆணையா் க. சரவணகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.