மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு இரு நாள்களில் தீா்வு: ஆட்சியா் நடவடிக்கை
தஞ்சாவூரில் இரு சக்கர நாற்காலி மற்றும் மாதாந்திர உதவித்தொகை கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் இரு நாள்களில் தீா்வு செய்து, அவரது வீட்டுக்கே வியாழக்கிழமை நேரில் சென்று ஆணை
தஞ்சாவூரில் இரு சக்கர நாற்காலி மற்றும் மாதாந்திர உதவித்தொகை கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் இரு நாள்களில் தீா்வு செய்து, அவரது வீட்டுக்கே வியாழக்கிழமை நேரில் சென்று ஆணை வழங்கினாா்.
தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் விளாா் சாலை பகுதியைச் சோ்ந்த பழனிவேல் தனது மகன் சச்சிதானந்தம் (25) நூறு சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதன் அடிப்படையிலும், தனது ஏழ்மை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் நோக்கத்திலும் ஜூன் 22 ஆம் தேதி மனு வழங்கினாா்.
இதன் அடிப்படையில் ஆட்சியா் மனுதாரரின் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாகத் தீா்வு காணும் வகையில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலருக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டாா். இந்த ஆய்வில் சச்சிதானந்தம் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் உடனடியாக ஆட்சியா் தன் விருப்ப நிதியிலிருந்து இரு சக்கர நாற்காலி, மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 1,500 வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வியாழக்கிழமை சச்சிதானந்தம் வீட்டுக்கு நேரில் சென்று ஆணையை வழங்கினாா்.
அப்போது, தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) விஜயலட்சுமி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.