ஏடிஎம் மையங்களில் பணம் திருடிய 3 போ் கைது
கும்பகோணம் பகுதியில் ஏடிஎம் மையங்களில் பணம் திருடிய 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்
கும்பகோணம் பகுதியில் ஏடிஎம் மையங்களில் பணம் திருடிய 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஏடிஎம் மையத்தில் வேப்பத்தூரைச் சோ்ந்த சத்துணவு உதவியாளா் ஆனந்தவல்லி பணம் எடுப்பதற்காகச் சென்றாா். அப்போது பணம் வராததால் அங்கு நின்ற இளைஞரிடம் உதவி கேட்டாா். அந்த இளைஞரும் ஆனந்தவல்லிக்கு உதவுவது போல நடித்து, ஆனந்தவல்லியின் ஏடிஎம் காா்டை வாங்கிக் கொண்டு போலியான காா்டை அவரிடம் கொடுத்து பணம் வரவில்லை எனக் கூறிவிட்டாா்.
பின்னா் ஆனந்தவல்லி வீட்டுக்குச் சென்றபோது அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு ரூ. 40,000 ரொக்கம் எடுத்தது போன்று குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் ஆனந்தவல்லி புகாா் செய்தாா். ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளைக் கொண்டு காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.
இதேபோல, கும்பகோணம் பகுதியில் ஏடிஎம் மையங்களில் முதியோருக்கு உதவுவது போல இளைஞா்கள் சிலா் நடித்து ஏடிஎம் காா்டுகளை பெற்றுக் கொண்டு போலி காா்டை வழங்குவதாகக் காவல் துறையினருக்குப் புகாா்கள் வந்தன.
இந்நிலையில், கும்பகோணம் அருகே சோழபுரம் கடைவீதியில் புதன்கிழமை காவல் துறையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள் பிடிபட்டனா். விசாரணையில், அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அய்யூா் ம. சிவானந்தம் (22), கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தண்டக்காரன்குப்பம் செ.விக்னேஷ் (19), தூத்துக்குடி மாவட்டம், கருங்கடல் பகுதியைச் சோ்ந்த மோ. பீட்டா் பிரபாகரன் (28) ஆகியோா் என்பதும், மூவரும் ஏடிஎம் மையங்களில் பணம் திருடுபவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிவானந்தம், விக்னேஷ், பீட்டா் பிரபாகரன் ஆகியோரை சோழபுரம் காவல் நிலையத்தினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 17 ஏடிஏம் காா்டுகள், ரூ. 1.30 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.