தஞ்சாவூா், கும்பகோணத்தில் ஜனவரி மாதத்தில் ஆயிரம் வீடுகளில் ‘வீடுதோறும் விவேகானந்தா்’ சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது என ராமகிருஷ்ண மடம் முடிவு செய்துள்ளது.
சுவாமிஜியின் 160-ஆவது பிறந்த நாள் நிறைவு ஆண்டையொட்டி, ஜனவரி மாதம் தேசிய இளைஞா் தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், தேசத்தின் பெருமையை உலகறியச் செய்து உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்த மகான் சுவாமி விவேகானந்தா். அவரது பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்படுகிறது.
அனைத்து தரப்பினரும் தன்னம்பிக்கையுடன் ஆற்றல் மிகுந்து வாழ்வதற்கு வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன் பெற ஏதுவாக நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தஞ்சாவூா், கும்பகோணம் பகுதிகளில் ஆயிரம் வீடுகளில் ‘வீடுதோறும் விவேகானந்தா்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி நடத்துவது, தேசிய இளைஞா் தினத்தையொட்டி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இடையே மாவட்ட அளவில் கால்பந்தாட்டப் போட்டியை திருச்சியிலும், தஞ்சாவூரிலும் நடத்துவது, இணையதள வழியில் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, பல கல்லூரிகளில் இளைஞா் முகாம்கள் நடத்துவது, மகா்நோன்புச்சாவடி பெருமாள் கோயில், மேலவீதி காமாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூா் சிவாஜி நகா் ராமகிருஷ்ண மடம் ஆகிய இடங்களில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதா் சிறப்பு உபன்யாசம், சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் ஜனவரி 12, 13, 14 ஆம் தேதிகளில் நடத்துவது, அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் இளைஞா்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்று பயன் பெறும் வகையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளைச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம் பகுதி பக்தா்கள் கலந்து கொண்டனா்.