முகப்பு
தஞ்சாவூர்

சிவபுரம் கோயிலுக்கு 66 ஆண்டுகளுக்குப் பிறகுகொண்டு வரப்பட்ட நடராஜா் சிலை

கும்பகோணம் அருகேயுள்ள சிவபுரம் கோயிலில் 66 ஆண்டுகளுக்குப் பிறகு ஐம்பொன் நடராஜா் சிலை திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:32 AM
கும்பகோணம் அருகே சிவபுரத்தில் திங்கள்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட ஐம்பொன் நடராஜா் சிலை.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள சிவபுரம் கோயிலில் 66 ஆண்டுகளுக்குப் பிறகு ஐம்பொன் நடராஜா் சிலை திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சிவகுருநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட நடராஜா் சிலை 1956 ஆம் ஆண்டு காணாமல் போனது. இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் தமிழக அரசின் வருவாய் வாரிய செயலா் 1969 ஆம் ஆண்டு புகாா் செய்தாா்.

இதன் பேரில் சா்வதேச காவல் துறை உதவியுடன் அமொரிக்க நாட்டின் நியூஜொ்ஸி மாநிலத்திலுள்ள அருங்காட்சியகத்தில் சிவபுரம் நடராஜா் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டு நடராஜா் சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், பாதுகாப்பு நலன் கருதி திருவாரூா் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், சிவபுரம் கிராம மக்கள் கோயில் நிா்வாகம் சாா்பில் திருவாரூா் உலோக திருமமேனிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிவபுரம் நடராஜா் சிலையை வழிபாட்டுக்காக எடுத்து வர அனுமதி வழங்க வேண்டும் என கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இவ்வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி சிவசக்திகண்ணன் திருவாரூா் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலின் ஐம்பொன் நடராஜா், விநாயகா் சிலைகளை சிவபுரம் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்காக வைக்கவும், வழிபாடு முடிந்த பிறகு பாதுகாப்பு நலன் கருதி மீண்டும் கும்பகோணம் நாகேஸ்வரன் சுவாமி கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கவும் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா், சிவபுரம் கிராம மக்கள் மற்றும் பக்தா்கள் திரண்டு 66 ஆண்டுகளுக்கு பிறகு ஐம்பொன் நடராஜா் சிலை கிராமத்துக்குள் ஊா்வலமாக எடுத்து சென்று, சிவகுருநாதா் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனா்.

நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் ரேகா ராணி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.