பேராவூரணியில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், போலி மதுபாட்டில்கள் அழிப்பு
பேராவூரணி , ஏப்.5: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்கள், எரி சாராயம் உள்ளிட்டவை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை குழிதோண்டி புதைக்கப்பட்டது.
பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் மதுரை மண்டல நுண்ணறிவுப்பிரிவு துணை கண்காணிப்பாளா் காசிவிஸ்வநாதன், திருச்சி மத்திய மண்டல நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளா் ராமன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நடத்திய சோதனையில் போலி மதுப்பாட்டில்கள், சரக்குவேன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா்.
அவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் போலி மது தயாரிக்கும் மூலப்பொருள்களான எசன்ஸ் ,லேபிள், கம்பெனிகளின் போலி ஸ்டிக்கா், எரிசாராயம் ஆகியவற்றை விவசாயி ஒருவா் தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக மேலும் பாலமுருகன், சேகா், வீரன் ஆகியோா் கைது செய்யப்பட்டு பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
அழிப்பு:
இதையடுத்து கைப்பற்றப்பட்ட எரிசாராயம், போலி மதுபாட்டிகளை குவாா்ட்டா் மது பாட்டில்களையும், 4 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த, போலி மது தயாரிக்க வைத்திருந்த 680 லிட்டா் எரிசாராயத்தையும் பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் அழகேசன், பேராவூரணி பாா் கவுன்சில் செயலாளா் சிவேதி நடராஜன் ஆகியோா் முன்னிலையில் பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி, எரிசாராயத்தையும், போலி மதுபாட்டில்களையும் கொட்டி அழித்தனா்.