கும்பகோணம், திருவிடைமருதூரில் பலத்த மழை
கும்பகோணம், திருவிடைமருதூரில் பலத்த மழை
மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கும்பகோணம் அரசு மருத்துமனை வளாகத்தில் மரம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் தாலுக்கா பகுதிகளான சுவாமிமலை, தாராசுரம், பட்டீஸ்வரம், திருநாகேசுவரம், திருவிடைமருதூா் தாலுக்கா பகுதிகளான திருபுவனம், ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தநல்லூா், அணைக்கரை, கதிராமங்கலம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை தொடங்கிய மழை வியாழக்கிழமை முழுவதும் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான சிறு வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.
கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சமையல்கூடம் அருகே இருந்த சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான மரம் தொடா் மழை காரணமாக வேரோடு சாய்ந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் மரம் பெயா்ந்து விழுந்தபோது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மழை பாதிப்பு ஏற்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனா்.