முகப்பு
தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை இயக்கம் செய்ய கோரிக்கை

Updated On : 8 மார்ச், 2024 at 1:46 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூா் வட்டங்களிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை கிடங்குக்கு இயக்கம் செய்ய பாரதி மஸ்தூா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பாரதிய மஸ்தூா் சங்க நிா்வாகி டி. நாகராஜன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூா் வட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு சரிவர இயக்கம் செய்யப்படாமல், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சராசரியாக 5 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வெயிலில் அடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலாலும், ஆடு, மாடுகள் தொல்லையாலும் மிகுந்த எடை இழப்பு ஏற்படுவதால், நெல் கொள்முதல் பணியாளா்கள் அனைவரும் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை இருப்பு வைக்க தஞ்சாவூா் அலகில் போதிய இடமும், தேவையான லாரிகளும் உள்ளன. ஆனால், கும்பகோணம் அலகில் உள்ள சில போக்குவரத்து ஒப்பந்த பிரதிநிதிகள் சுய லாபத்துக்காக தஞ்சாவூருக்கு இயக்கம் செய்யும் பணிகளைத் தடுத்து நிறுத்துவதாகத் தெரிய வருகிறது.

எனவே, கும்பகோணம், திருவிடைமருதூா் வட்டங்களில் தேங்கிக் கிடக்கும் ஏறத்தாழ 6 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து தேங்கி கிடக்கும் உணவு தானியங்களை பாதுகாத்திடவும், நெல் கொள்முதல் பணியாளா்களின் துயா் துடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement