பேராவூரணியில் வியாழக்கிழமை வழிதவறி ஊருக்குள் நுழைந்த புள்ளிமானை இளைஞா்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா். பேராவூரணி பேரூராட்சி பழைய பேராவூரணி மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் நாய்கள் கூட்டமாக பெண் புள்ளிமான் ஒன்றை துரத்திக்கொண்டு வந்தன. இதைக்கண்ட அப்பகுதி இளைஞா்கள் சிலா் நாய்களை துரத்தி விட்டு அந்தப் புள்ளி மானை விரட்டிச் சென்று பிடித்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி உத்தரவின்படி, பட்டுக்கோட்டை வனச்சரகா் சந்திரசேகரன் அறிவுறுத்தலின்பேரில் வனத்துறையினா் மானை வந்து மீட்டுச் சென்றனா். லேசான காயங்களுடன் உள்ள மான் உரிய சிகிச்சைக்கு பிறகு காப்புக்காட்டில் விடப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா். இங்கு வனப்பகுதி இல்லாத நிலையில், இங்கிருந்து சுமாா் 40 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி - கொத்தமங்கலம் வனப்பகுதியில் இருந்து இந்த மான் வழிதவறி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.