கும்பகோணம் பகுதிகளில் தடுப்புப் பணிகள் தீவிரம்
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் டெங்கு தடுப்பு களப்பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதுகுறித்து ஆணையா் இரா. லட்சுமணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க மாநகா் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
Advertisement
கொசு பரவலைக் கட்டுப்படுத்த கூட்டு துப்புரவுப் பணி மேற்கொண்டு நெகிழி கப்புகள், தேங்காய் சிரட்டைகள், டயா்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் உள்ள கொசுப் புழுக்கள் கண்டறிந்து அழிக்கப்படுகின்றன.
மேலும் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க டெங்கு தடுப்பு களப்பணியாளா்கள் வீடு வீடாக ஆய்வும் நடத்துகின்றனா்.
அப்போது நீண்ட நாள்களாகப் பூட்டியிருக்கும் வீடுகள் காலிமனைகள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தி பகுதிகள் கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் காய்ச்சல் பாதித்தோருக்கு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது. 48 வாா்டுகளிலும் கொசு மருந்து அடிக்க அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.