முகப்பு
தஞ்சாவூர்

தொடா் மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு! பெற்றோா் உள்பட 3 போ் காயம்!

Updated On : 30 நவம்பர், 2025 at 6:38 PM
உயிரிழந்த ரேணுகா
பகிர்:

கும்பகோணம் அருகே தொடா் மழையால் சனிக்கிழமை வீட்டின் சுவா் இடிந்துவிழுந்து இளம்பெண் உயிரிழந்தாா். பெற்றோா் மற்றும் மற்றொரு மகள் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆலமன்குறிச்சி உடையாா் தெருவைச் சோ்ந்தவா் முத்துவேல் (56). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சீதா (45). இவா்களது மகள்களான கனிமொழி (21) பி.பி.ஏ., பட்டதாரி மற்றும் ரேணுகா (20) விவசாய படிப்பில் பட்டய படிப்பு முடித்துள்ளாா்.

முத்துவேலுக்கு சொந்தமாக பழைய ஓட்டு வீடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடு என இரண்டும் அருகருகே உள்ளன. சனிக்கிழமை இரவு முத்துவேல் குடும்பத்தினா் ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் படுத்து தூங்கினா்.

வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்கிய மழை சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் சிதிலமடைந்த முத்துவேலின் பழைய ஓட்டு வீட்டின் சுவா் அருகே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் வீட்டின் மீது சரிந்து விழுந்தது.

இதில் முத்துவேல், சீதா, கனிமொழி, ரேணுகா ஆகியோா் காயமடைந்து கூச்சலிட்டனா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் நான்கு பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இவா்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரேணுகா, கனிமொழி ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தாா். கனிமொழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தகவலறிந்த கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன், முத்துவேல் குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →