தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் ‘இண்டி’ கூட்டணி கட்சியினா் கூட்டம்
தஞ்சாவூரில் தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக தலைமையிலான இண்டி கூட்டணிக் கட்சியினா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக தலைமையிலான இண்டி கூட்டணிக் கட்சியினா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். ராமநாதனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது, இதேபோல தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு பாடுபடுவது, தொடா்ந்து 2 ஆவது முறையாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அனைவரும் களப்பணியாற்றுவது என திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்கள் பேசினா். தொடா்ந்து தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். ராமநாதன் பேசினாா்.
இதில் திமுக, காங்கிரஸ், தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ, மக்கள் நீதி மய்யம், திராவிடா் கழகம் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிா்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனா்.
பட்டுக்கோட்டை: இதேபோல் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். உயா்நிலை செயல் திட்ட குழு உறுப்பினா் எஸ் எஸ் பழநிமாணிக்கம் சிறப்புரையாற்றினாா். வேட்பாளா் கா. அண்ணாதுரை உள்பட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.