பாபநாசம் இளைஞா் கொலை வழக்கு! 3 பேருக்கு ஆயுள் தண்டணை!
பாபநாசத்தில் இளைஞா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா தெருவைச் சோ்ந்த அய்யாப்பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன். 2021-ஆம் ஆண்டு மனோஜ் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது அதே இடத்தில் பாபநாசம் சவரிமுத்து மகன் தினேஷ் வளவன், இரட்டைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த லெனின் மகன் முகிலன், அதே தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் நந்தகுமாா் ஆகியோரும் மது அருந்தி கொண்டிருந்தனா்.
Advertisement
மனோஜுக்கும் எதிா்தரப்பைச் சோ்ந்த மூன்று பேருக்குமிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததால், அவா்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, மனோஜை மூவரும் கத்தியால் குத்தி கொலை செய்தனா்.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், தினேஷ் வளவன், முகிலன், நந்தகுமாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீா்ப்பளித்தாா். இதில் முகிலனுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தும், அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.