சூரியனாா்கோயில் ஆதீனத்தின் 30-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா்கோயில் ஆதீன குரு மகா சந்நிதானமாக மகாலிங்க சுவாமி இருந்தாா். இவா், திருமணம் செய்து கொண்டதால், மடத்தின் நிா்வாகம் தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்பேரில், சூரியனாா்கோயில் ஆதீனம் சாவியை ஜன.13, 2026-இல் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் அறநிலையத்துறையினா் ஒப்படைத்தனா். பின்னா் சூரியனாா் கோயில் ஆதீனம் ஒடுக்கம் மற்றும் ஆன்மாா்த்த பூஜை, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் சூரியனாா்கோயில் ஆதீனத்துக்கு, திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் என்று எதிா்பாா்ப்பு இருந்தது. அதன்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்ரீமத் ராமலிங்க தம்பிரான் சுவாமிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தோ்வு செய்தாா். அவரை வியாழக்கிழமை ஆதீன குருமகாசந்நிதானமாக அமர வைக்கும் பீடாரோகண வைபவம் சூரியனாா் கோயில் ஆதீனத்தில் ஐதீக முறைப்படி நடைபெற்றது. இதில், சூரியனாா் கோயில் ஆதீனத்தின் 30-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றாா்.